சங்கீதம் 148
யெகோவாவைத் துதியுங்கள்.
 
வானங்களிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள்;
மேலே உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
அவருடைய தூதர்களே, எல்லோரும் அவரைத் துதியுங்கள்;
அவருடைய பரலோக சேனைகளே, எல்லோரும் அவரைத் துதியுங்கள்.
சூரியனே, சந்திரனே, அவரைத் துதியுங்கள்;
பிரகாசிக்கிற நட்சத்திரங்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்.
மிக உயர்ந்த வானங்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்;
ஆகாயங்களுக்கு மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.
 
அவர் கட்டளையிட அவை படைக்கப்பட்டதால்
அவைகள் யெகோவாவினுடைய பெயரைத் துதிக்கட்டும்.
யெகோவா அவைகளை எப்பொழுதும் என்றென்றைக்கும் நிலைப்படுத்தினார்;
அழிந்துபோகாத ஒரு விதிமுறையை ஏற்படுத்தியிருக்கிறார்.
 
பூமியிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள்,
பெரிய கடல் உயிரினங்களே, கடலின் ஆழங்களே,
நெருப்பே, பனிக்கட்டி மழையே, உறைபனியே, மேகங்களே,
அவருடைய கட்டளையை நிறைவேற்றும் புயல்காற்றே,
மலைகளே, குன்றுகளே,
பழமரங்களே, அனைத்து கேதுரு மரங்களே,
10 உயிரினங்களே, அனைத்து கால்நடைகளே,
சிறிய உயிரினங்களே, பறக்கும் பறவைகளே,
11 பூமியின் அரசர்களே, சகல நாடுகளே,
இளவரசர்களே, பூமியிலுள்ள சகல ஆளுநர்களே,
12 இளைஞர்களே, இளம்பெண்களே,
முதியவர்களே, பிள்ளைகளே அவரைத் துதியுங்கள்.
 
13 அவர்கள் யெகோவாவினுடைய பெயரைத் துதிக்கட்டும்;
ஏனெனில் அவருடைய பெயர் மட்டுமே புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறது;
அவருடைய சிறப்பு பூமிக்கும், வானங்களுக்கும் மேலாக இருக்கிறது.
14 அவர் தம் உண்மையுள்ள பணியாளர்களாகிய,
இருதயத்திற்கு உகந்த இஸ்ரயேல் மக்கள் துதிக்கும்படி,
அவர் தம்முடைய மக்களுக்கென ஒரு வல்லமையுள்ள அரசனை உயர்த்தியிருக்கிறார்;
அதற்காக அவரை எல்லா பரிசுத்தவான்களும் இஸ்ரயேலரும் துதிக்கிறார்கள்.
 
யெகோவாவைத் துதியுங்கள்.