சங்கீதம் 104
என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.
 
என் இறைவனாகிய யெகோவாவே, நீர் எவ்வளவு பெரியவர்;
மேன்மையையும், மகத்துவத்தையும் நீர் அணிந்திருக்கிறீர்.
 
யெகோவா ஆடையைப்போல ஒளியை அணிந்துள்ளார்;
அவர் வானங்களை ஒரு கூடாரத்தைப்போல் விரித்துள்ளார்.
அவர் தமது மேலறைகளை மழைமேகங்களின் மேலாக அமைக்கிறார்;
அவர் மேகங்களைத் தமது தேராக்கி,
காற்றின் சிறகுகள்மேல் செல்கிறார்.
அவர் காற்றுகளைத் தமது இறைத்தூதுவர்களாவும்,
நெருப்பு ஜூவாலைகளைத் தம்முடைய ஊழியர்களாகவும் ஆக்குகிறார்.
 
அவர் பூமியை அதின் அடித்தளங்கள்மீது அமைத்தார்;
அது ஒருபோதும் அசைக்கப்படாது.
உடையினால் மூடுவது போல் நீர் அதை ஆழ்கடலினால் மூடினீர்;
வெள்ளம் மலைகளுக்கு மேலாய் நின்றது.
ஆனாலும் உமது கண்டிப்பின்முன் வெள்ளம் விலகி ஓடியது;
உமது முழக்கத்தின் சத்தத்தைக் கேட்டு அது விரைந்து ஓடியது.
அவைகள் மலைகளுக்கு மேலாய் ஓடி,
பள்ளத்தாக்குகளில் இறங்கி,
நீர் அவைகளுக்கு ஏற்படுத்திய இடத்தில் நின்றன.
அவைகள் கடக்கமுடியாத ஓர் எல்லையை நீர் ஏற்படுத்தினீர்;
அவை இனி ஒருபோதும் பூமியை மூடிக்கொள்ளாது.
 
10 அவர் நீரூற்றுகளை பள்ளத்தாக்குகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்படி செய்கிறார்;
அது மலைகளுக்கிடையே ஓடுகின்றது.
11 அவை வெளியின் மிருகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் கொடுக்கின்றன;
காட்டுக் கழுதைகளும் அங்கே தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்கின்றன.
12 ஆகாயத்துப் பறவைகள் நீர்நிலைகளின் அருகே கூடு கட்டுகின்றன;
கிளைகளின் மத்தியிலே அவை பாடுகின்றன.
13 அவர் தமது மேலறைகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்;
பூமி அவருடைய செய்கையின் பலனால் திருப்தியடைகிறது.
14 அவர் மந்தைகளுக்காகப் புல்லையும்,
மனிதன் பயிரிடும் தாவரங்களையும் வளரச்செய்கிறார்,
அவர் பூமியிலிருந்து அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கிறார்:
15 மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சை இரசத்தையும்,
அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும்,
அவர்களைப் பெலப்படுத்தும் உணவையும் விளைவிக்கிறார்.
16 யெகோவாவினுடைய மரங்களுக்கு, அவர் நாட்டிய லெபனோனின் கேதுரு மரங்களுக்கு
நல்ல நீர்ப்பாய்ச்சலை கொடுக்கிறார்.
17 அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன;
கொக்குகள் தேவதாரு மரங்களில் குடியிருக்கின்றன.
18 உயர்ந்த மலைகள் காட்டாடுகளுக்குச் சொந்தமாயும்,
செங்குத்தான பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாயும் இருக்கின்றன.
 
19 காலங்களைக் குறிக்க அவர் நிலவைப் படைத்தார்;
சூரியன் தான் எப்போது மறையவேண்டும் என்பதை அறியும்.
20 நீர் இருளைக் கொண்டுவருகிறீர், அப்பொழுது இரவாகின்றது;
காட்டு மிருகங்கள் எல்லாம் பதுங்கித் திரிகின்றன.
21 சிங்கங்கள் தங்கள் இரைக்காகக் கர்ஜிக்கின்றன;
இறைவனிடமிருந்து அவை தங்களுடைய உணவைத் தேடுகின்றன.
22 சூரியன் உதித்ததும் அவை ஒளிந்து ஓடுகின்றன;
அவை திரும்பிப்போய் தங்கள் குகைகளில் படுத்துக் கொள்கின்றன.
23 அப்பொழுது மனிதன் தன் வேலைக்குப் போகிறான்;
மாலையாகும்வரை தன் தொழிலில் ஈடுபடுகின்றான்.
 
24 யெகோவாவே, உமது செயல்கள் எண்ணற்றவை!
அவை அனைத்தையும் நீர் ஞானத்தில் படைத்திருக்கிறீர்;
பூமி நீர் படைத்த உயிரினங்களால் நிறைந்திருக்கின்றது.
25 அங்கே விரிந்து பரந்த கடல் உண்டு;
பெரிதும் சிறிதுமான எண்ணிலடங்கா
வாழும் உயிரினங்கள் அங்கே உண்டு.
26 அங்கே கப்பல்கள் இங்குமங்கும் போகின்றன;
நீர் உருவாக்கிய லிவியாதானும் அங்கே துள்ளி விளையாடும்.
 
27 நீர் அவைகளுக்கு உரிய நேரத்தில் உணவு கொடுப்பீர் என்று
அவைகளெல்லாம் உம்மையே பார்த்திருக்கின்றன.
28 நீர் அதை அவர்களுக்கு வழங்கும்போது,
அவை சேகரித்துக்கொள்கின்றன;
நீர் உமது கரத்தைத் திறக்கும்போது,
அவை நன்மைகளால் திருப்தியடைகின்றன.
29 நீர் உமது முகத்தை மறைக்கும்போது,
அவை திகைக்கின்றன;
நீர் அவைகளின் சுவாசத்தை எடுத்துவிட,
அவை இறந்து தூசிக்குத் திரும்புகின்றன.
30 நீர் உமது ஆவியை அனுப்புகையில்,
அவை படைக்கப்படுகின்றன;
நீர் பூமியின் மேற்பரப்பைப் புதுப்பிக்கிறீர்.
 
31 யெகோவாவின் மகிமை என்றென்றும் நிலைத்திருப்பதாக;
யெகோவா தமது செயல்களில் மகிழ்வாராக.
32 அவர் பூமியைப் பார்க்கும்போது அது நடுங்குகின்றது;
மலைகளைத் தொடும்போது அவை புகைகின்றன.
 
33 நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்;
நான் உயிரோடிருக்குமட்டும் என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
34 நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது,
என் தியானமும் அவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாக.
35 ஆனால் பாவிகள் பூமியிலிருந்து இல்லாமல் போவார்களாக;
கொடியவர்கள் இனி இல்லாமல் போவார்கள்.
 
என் ஆத்துமாவே யெகோவாவைத் துதி.
 
அல்லேலூயா.