64
நீர் வானங்களைப் பிரித்துக் கீழே வாரும்,
அப்பொழுது நாடுகள் உமக்கு முன்பாக நடுங்கும்!
விறகுகளை நெருப்பு எரிக்கும்போது
அது தண்ணீரைக் கொதிக்கச் செய்யும்.
அதுபோல் நீர் இறங்கி உமது பகைவர் உமது பெயரை அறிந்துகொள்ளச் செய்யும்.
நாடுகளை உமக்கு முன்பாக அதிரச்செய்யும்.
ஏனெனில் பண்டைய நாட்களில் நாங்கள் எதிர்பாராத
அச்சுறுத்தும் செயல்களை நீர் செய்தீர்,
நீர் வந்தபோது மலைகள் உமக்கு முன்பாக நடுங்கின.
உமக்குக் காத்திருப்போருக்காகச் செயலாற்றும் இறைவனைப்போன்ற,
வேறு ஒருவரை ஆதிமுதல் ஒருவரும் கேள்விப்பட்டதுமில்லை,
எந்த ஒரு கண்ணும் கண்டதுமில்லை,
எந்த ஒரு செவியும் கேட்டதுமில்லை.
உமது வழிகளை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியுடன் சரியானதைச் செய்வோருக்கு
நீர் உதவிசெய்ய வருகிறவர்.
ஆனால் நாங்கள் தொடர்ந்து உமக்கெதிராகப் பாவம் செய்தபோது,
நீர் கோபங்கொண்டீர்.
அப்படியானால் எப்படி நாம் காப்பாற்றப்படுவோம்?
நாம் அனைவரும் அசுத்தரைப் போலானோம்,
எங்களுடைய நீதியான செயல்களெல்லாம் கறைபட்ட கந்தலைப்போல் இருக்கின்றன,
நாம் எல்லோரும் இலையைப்போல் வாடிப்போகிறோம்;
காற்றைப்போல எங்கள் பாவங்கள் எங்களை அள்ளிக்கொண்டுபோகிறது.
உமது பெயரைச்சொல்லிக் கூப்பிடுவோரோ,
உம்மைப் பற்றிப்பிடிக்க முயற்சிக்கிறவரோ ஒருவருமில்லை;
ஏனெனில், நீர் உம்முடைய முகத்தை எங்களிடமிருந்து மறைத்து,
எங்கள் பாவங்களினிமித்தம் எங்களை அழிந்துபோகவிட்டீர்.
 
ஆயினும் யெகோவாவே, நீரே எங்கள் தகப்பன்.
நாங்கள் களிமண், நீர் குயவன்;
நாங்களெல்லோரும் உமது கரத்தின் வேலைப்பாடு.
யெகோவாவே, எங்களுடன் அளவுக்கதிகமாக கோபங்கொள்ள வேண்டாம்;
எங்கள் பாவங்களை என்றென்றும் நினைவுகூரவும் வேண்டாம்.
உமது மக்களாகிய எங்கள் அனைவரையும்
நோக்கிப்பாரும்.
10 உமது பரிசுத்த பட்டணங்கள் பாலைவனமாகிவிட்டன;
சீயோன் பாழ் நிலமானது, எருசலேமும் பாழாய்ப் போயிற்று.
11 எங்கள் முற்பிதாக்கள் உம்மைத் துதித்த
பரிசுத்தமும் மகிமையுமான எங்கள் ஆலயம் நெருப்புக்கு இரையாகி,
எங்களுக்கு இன்பமாய் இருந்தவையெல்லாம் பாழாய் கிடக்கின்றன.
12 யெகோவாவே, இவற்றுக்குப் பின்னும் நீர் ஒன்றுமே செய்யாதிருப்பீரோ?
நீர் மவுனமாயிருந்து அளவுக்கதிகமாக எங்களைத் தண்டிக்கப் போகிறீரோ?