56
அந்நியருக்கும் இரட்சிப்பு
யெகோவா சொல்வது இதுவே:
“நியாயத்தைக் கைக்கொண்டு
நீதியைச் செய்யுங்கள்.
ஏனெனில், எனது இரட்சிப்பு சமீபமாய் இருக்கிறது;
எனது நீதி விரைவில் வெளிப்படுத்தப்படும்.
இதை செய்கிறவர்களும், இவற்றை உறுதியாய் பற்றிக்கொண்டு கைக்கொண்டு,
ஓய்வுநாளை தூய்மைக்கேடாக்காமல் கடைபிடித்து,
தீமைசெய்யாதபடி தன் கையை விலக்கிக் காத்துக்கொள்கிற மனிதர்கள்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.”
 
யெகோவாவோடு தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் அந்நியர்,
“யெகோவா என்னைத் தமது மக்களிடமிருந்து நிச்சயமாகப் பிரித்துவிடுவார்”
என்று சொல்லாமல் இருக்கட்டும்.
அவ்வாறே அண்ணகன் எவனும், “நான் பட்டுப்போன மரந்தானே”
என்று முறைப்பாடு சொல்லாமலும் இருக்கட்டும்.
யெகோவா சொல்வது இதுவே:
“எனது ஓய்வுநாளை கடைப்பிடித்து,
எனக்கு விருப்பமானவற்றைத் தெரிந்துகொண்டு
என் உடன்படிக்கையை உறுதியாய்க் கைக்கொள்கிறவர்களான அண்ணகர்களுக்கு,
என் ஆலயத்திற்குள்ளும், அதின் சுவர்களிலும் ஒரு நினைவுச் சின்னத்தையும்,
மகன்கள் மற்றும் மகள்களுக்குமுரிய பெயர்களைவிடச் சிறந்த
ஒரு பெயரையும் கொடுப்பேன்.
ஒருபோதும் அழிந்துபோகாதிருக்கிற
நித்திய பெயரையும் அவர்களுக்குக் கொடுப்பேன்.
யெகோவாவை அண்டியிருந்து,
அவருக்கு ஊழியம் செய்து,
யெகோவாவினுடைய பெயரை நேசித்து அவரை வழிபடும் பிறதேசத்தார் அனைவருக்கும்,
ஓய்வுநாட்களை தூய்மைக்கேடாக்காமல்
அதைக் கைக்கொண்டு எனது உடன்படிக்கையை
உறுதியாய் பற்றிக்கொள்ளும் அனைவருக்கும் சொல்வதாவது:
நான் அவர்களை என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவந்து,
என் ஜெபவீட்டில் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பேன்.
அவர்களின் தகனபலிகளும்,
மற்ற பலிகளும் எனது பலிபீடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஏனெனில், எனது வீடு எல்லா நாடுகளுக்கும்
ஜெபவீடு என்று அழைக்கப்படும்.
நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரைச் சேர்க்கும்
ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்:
ஏற்கெனவே சேர்க்கப்பட்டவர்களோடுகூட
இன்னும் மற்றவர்களையும் நான் கூட்டிச்சேர்ப்பேன்.”
கொடியோருக்கு விரோதமான இறைவன்
வயலின் மிருகங்களே, எல்லோரும் வாருங்கள்.
காட்டு மிருகங்களே, எல்லோரும் வந்து இரையை விழுங்குங்கள்.
10 இஸ்ரயேலின் காவலாளிகள் அனைவரும்
அறிவில்லாத குருடர்;
அவர்கள் எல்லோரும் குரைக்கமாட்டாத
ஊமையான நாய்கள்;
அவர்கள் படுத்துக் கிடந்து கனவு காண்கிறார்கள்,
நித்திரை செய்யவே விரும்புகிறவர்கள்.
11 அவர்கள் பெரும் பசிகொண்ட நாய்கள்;
அவர்கள் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.
பகுத்தறிவு இல்லாத மேய்ப்பர்கள்,
அவர்கள் எல்லாரும் தங்கள் சொந்த வழிக்குத் திரும்பி,
ஒவ்வொருவனும் தன் சுய இலாபத்தையே தேடுகிறார்கள்.
12 ஒவ்வொருவரும் சத்தமிட்டு, “வாருங்கள்;
நாம் போய் திராட்சைமது கொண்டுவருவோம்;
நாம் மதுவை நிறையக் குடிப்போம்,
நாளைய தினமும் இன்றுபோல் இருக்கும்,
அல்லது இதைவிடச் சிறப்பாகவும் இருக்கும்” என்கிறார்கள்.