54
சீயோனின் எதிர்கால மகிமை
“பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்து பாடு;
பிரசவ வேதனைப்படாதவளே,
ஆர்ப்பரித்துப் பாடி ஆனந்த சத்தமிடு,
ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள்
கணவனுடன் வாழ்கிறவளுடைய
பிள்ளைகளைவிட அதிகமாயிருப்பார்கள்”
என்று யெகோவா சொல்கிறார்.
“உனது கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு,
உனது குடியிருப்புகளின் திரையை நன்கு அகலமாக விரி;
இவற்றைச் செய்ய பின்வாங்காதே.
கயிறுகளை தாராளமாக நீட்டி,
முளைகளை உறுதிப்படுத்து.
ஏனெனில் நீ வலது புறமாகவும், இடது புறமாகவும் பரவியிருப்பாய்;
உன்னுடைய சந்ததிகள் நாடுகளை வெளியேற்றி,
அவர்களுடைய பாழடைந்த பட்டணங்களில் குடியேறுவார்கள்.
 
“பயப்படாதே, நீ வெட்கப்படமாட்டாய்;
அவமானத்திற்குப் பயப்படாதே, நீ தாழ்த்தப்படமாட்டாய்.
நீ உன் வாலிப காலத்தின் வெட்கத்தை மறந்துபோவாய்,
விதவைக்கால நிந்தனையையும் இனி ஒருபோதும் நினைக்கமாட்டாய்.
ஏனெனில், உன்னைப் படைத்தவரே உன் நாயகர்;
சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர்,
இஸ்ரயேலின் பரிசுத்தரே உனது மீட்பர்;
அவர் பூமி முழுவதற்கும் இறைவன் என்னப்படுவார்.
கைவிடப்பட்டு உள்ளத்தில் துக்கங்கொண்ட ஒரு மனைவியை அழைப்பதுபோலவும்,
இளமையில் திருமணம் செய்தும் விலக்கப்பட்ட மனைவியைத் திரும்பவும் அழைப்பதுபோலவும்
யெகோவா உன்னைத் திரும்பவும் அழைப்பார்”
என்று உனது இறைவன் சொல்கிறார்.
“நான் ஒரு நொடிப்பொழுது உன்னைக் கைவிட்டேன்,
ஆனால் ஆழ்ந்த இரக்கத்துடன் நான் உன்னைத் திரும்பவும் ஏற்றுக்கொள்வேன்.
என் கோபம் பொங்கி எழுந்ததால்,
உன்னிடமிருந்து என் முகத்தை ஒரு நொடிப்பொழுதே மறைத்தேன்;
ஆனால், நித்திய தயவுடன்
நான் உன்னில் இரக்கங்கொள்வேன்” என்று,
உன் மீட்பராகிய யெகோவா சொல்கிறார்.
 
“இது எனக்கு நோவாவின் நாட்களில் நடந்ததுபோல் இருக்கின்றது;
நோவாவின் நாட்களில் வந்த பெருவெள்ளம் இனி ஒருபோதும் பூமியை மூடமாட்டாது
என்று நான் ஆணையிட்டேன்.
ஆகவே இப்பொழுதோ உங்களுடன் கோபங்கொள்ளவோ,
அல்லது இனி ஒருபோதும் உங்களைக் கண்டிக்கவோ மாட்டேன்
என்று நான் ஆணையிட்டிருக்கிறேன்.
10 மலைகள் அசைக்கப்பட்டாலும்,
குன்றுகள் அகற்றப்பட்டாலும்
உன்மீதுள்ள என் நேர்மையான அன்பு அசைக்கப்படமாட்டாது;
என் சமாதானத்தின் உடன்படிக்கை அகற்றப்படமாட்டாது”
என்று உன்னில் இரக்கமுள்ள யெகோவா சொல்கிறார்.
 
11 “துன்புறுத்தப்பட்டிருக்கும் பட்டணமே, புயல்காற்றினால் அடிக்கப்பட்டு,
தேற்றப்படாமல் இருக்கும் பட்டணமே,
நான் உன்னை நீல இரத்தினக் கற்களாலும்,
உன் அஸ்திபாரங்களை இரத்தினக் கற்களாலும் கட்டுவேன்.
12 உனது கொத்தளங்களை சிவப்புக் கற்களாலும்,
உனது வாசல்களை மினுமினுக்கும் கற்களாலும்,
உனது மதில்கள் எல்லாவற்றையும் மாணிக்கக் கற்களாலும் கட்டுவேன்.
13 உன் பிள்ளைகள் யாவரும் யெகோவாவினால் போதிக்கப்பட்டிருப்பார்கள்;
அவர்களுடைய சமாதானமும் பெரிதாயிருக்கும்.
14 நீ நீதியில் நிலைநாட்டப்படுவாய்:
கொடுமை உன்னைவிட்டுத் தூரமாகும்;
நீ பயப்படுவதற்கு எதுவுமிராது.
பயங்கரம் உன்னைவிட்டுத் தூரமாய் அகற்றப்படும்;
அது உனக்குக் கிட்டவராது.
15 உன்னை யாராவது தாக்கினால் அது எனது செயல் அல்ல;
உன்னைத் தாக்குகிறவன் எவனும் உன்னிடம் சரணடைவான்.
 
16 “இதோ நானே நெருப்புத் தணலை
ஊதி வேலைக்கேற்ற
ஆயுதங்களைச் செய்யும் கொல்லனை படைத்தேன்.
பாழாக்கும் அழிவுகாரனையும் நானே படைத்தேன்.
17 ஆகவே உனக்கு எதிராகச் செய்யப்படும் ஆயுதம் எதுவும் வெற்றிகொள்ளாது,
உன்னைக் குற்றம் சாட்டும் ஒவ்வொரு நாவிற்கும் நீ அதன் பிழையைக் காட்டுவாய்.
யெகோவாவின் ஊழியருக்கு என்னிடமிருந்து கிடைக்கும்
அவர்களுக்குரிய நியாயப்படுத்துதல் இதுவே,
என்னிடமிருந்து கிடைக்கும் சொத்துரிமையும் இதுவே”
என்று யெகோவா சொல்லுகிறார்.