25
யெகோவாவுக்குத் துதி
யெகோவாவே, நீரே என் இறைவன்;
நான் உம்மைப் புகழ்ந்துயர்த்தி, உமது பெயரைத் துதிப்பேன்.
அற்புதமான செயல்களைச் செய்திருக்கிறீர்;
நீர் பூர்வகாலத்தில் அவைகளை திட்டமிட்டபடி,
பரிபூரண உண்மையுடன் நிறைவேற்றியுள்ளீர்.
நீர் அந்நியரின் பட்டணத்தை இடிபாடுகளின் குவியலாக்கினீர்;
அரணான பட்டணத்தைப் பாழாக்கினீர்.
அந்நியரின் அரண் இனிமேலும் ஒரு பட்டணமாயிராது;
அது இனியொருபோதும் திரும்பக் கட்டப்படுவதுமில்லை.
ஆகவே வலிமையுள்ள மக்கள் கூட்டங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்;
இரக்கமற்ற நாடுகளின் பட்டணங்கள் உம்மைக் கனம்பண்ணும்.
நீர் ஏழைகளுக்கு அடைக்கலமாயிருந்தீர்;
வறுமையுற்றோரின் துயரில் அவர்களுக்கு அடைக்கலமாயிருந்தீர்.
புயலிலிருந்து காக்கும் புகலிடமாகவும்,
வெயிலிலிருந்து காக்கும் நிழலாகவும் இருந்தீர்.
முரடர்களின் மூச்சு,
ஒரு மதிலுக்கு எதிராக வீசும் புயலைப்போல் இருக்கிறது.
அது பாலைவன வெப்பத்தைப் போலவும் இருக்கிறது.
அந்நியரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடக்குகிறீர்;
மேகத்தின் நிழலால் வெப்பம் தணிவதுபோல,
இரக்கமற்றோரின் பாடலும் அடங்கிப் போகிறது.
 
சேனைகளின் யெகோவா இந்த மலைமேல் எல்லா மக்கள்கூட்டங்களுக்கும்
சிறப்பான விருந்தொன்றை ஆயத்தம் பண்ணுவார்.
நன்றாகப் பதப்படுத்தப்பட்ட பழைய திராட்சை இரசமும்,
சிறந்த இறைச்சிகளும்,
உயர்வகை திராட்சை இரசமும் நிறைந்த விருந்தாக அது இருக்கும்.
இந்த எல்லா மக்கள் கூட்டங்களையும்
மூடியிருந்த மூடுதிரையை அவர் இந்த மலையில் அழிப்பார்;
இதுவே எல்லா நாடுகளையும் மூடியிருந்த திரைச்சீலையாகும்.
மரணம் என்றென்றும் இல்லாதபடி அவர் அதை விழுங்கிவிடுவார்.
ஆண்டவராகிய யெகோவா எல்லா முகங்களிலுமுள்ள
கண்ணீரைத் துடைத்துவிடுவார்.
அவர் பூமியெங்குமுள்ள தன் மக்களின்
அவமானத்தை நீக்கிவிடுவார்.
யெகோவாவே இதைப் பேசியிருக்கிறார்.
அந்த நாளிலே மக்கள் கூட்டங்கள்,
“நிச்சயமாக இவரே நம் இறைவன்; நாம் இவரில் நம்பிக்கை வைத்தோம்,
இவர் எங்களை மீட்டார்.
இவரே யெகோவா, இவரில் நாம் நம்பிக்கை வைத்தோம்;
இவர் கொடுக்கும் இரட்சிப்பில் நாம் மகிழ்ந்து களிகூருவோம்” என்பார்கள்.
 
10 யெகோவாவின் கரம் இந்த சீயோன் மலையில் தங்கும்;
வைக்கோல் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல்,
மோவாபியர் அவரின்கீழ் மிதிக்கப்படுவார்கள்.
11 நீந்துபவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல்,
மோவாபியர் தங்கள் கைகளை விரிப்பார்கள்;
அவர்களுடைய கைகளில் திறமை இருந்தபோதிலும்,
இறைவன் அவர்களுடைய பெருமையைச் சிறுமைப்படுத்துவார்.
12 மோவாபின் உயரமான அரண்செய்யப்பட்ட மதில்களை
அவர் கீழே தள்ளி விழ்த்துவார்.
அவைகளை அவர் நிலத்தின் புழுதியில் கீழே
தள்ளிப் போடுவார்.