15
மோவாபைப் பற்றிய இறைவாக்கு
மோவாபைப் பற்றி கூறப்பட்ட இறைவாக்கு:
ஒரே இரவில் மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம்
அழிக்கப்பட்டுப் பாழாயிற்று.
மோவாபிலுள்ள கீர் பட்டணமும் ஒரே இரவில்
அழிக்கப்பட்டுப் பாழாயிற்று.
தீபோன் மக்கள், அதன் மேடுகளிலுள்ள கோவில்களுக்கு
அழுவதற்கென்று போயிருக்கிறார்கள்.
மோவாப் மக்கள் நேபோவைக் குறித்தும், மேதேபாவைக் குறித்தும் புலம்புகிறார்கள்.
ஒவ்வொருவருடைய தலையும் மொட்டையடிக்கப்பட்டு,
ஒவ்வொருவருடைய தாடியும் சிரைக்கப்பட்டிருக்கிறது.
அவர்கள் துக்கவுடையை உடுத்தியபடி வீதிகளில் நிற்கிறார்கள்;
வீட்டுக் கூரைகள் மேலும்,
பொதுமக்கள் கூடும் சதுக்கங்களிலும் புலம்புகிறார்கள்.
அவர்கள் தேம்பித் தேம்பி அழுகிறார்கள்.
எஸ்போனியரும், எலெயாலேயரும் கூக்குரலிட்டு அழுகிறார்கள்,
அவர்களுடைய குரல் யாகாசுவரை கேட்கிறது.
ஆகவே மோவாபியரில் ஆயுதமணிந்தவர்களும் கதறி அழுகிறார்கள்;
அவர்கள் இருதயங்கள் சோர்ந்திருக்கின்றன.
 
எனது உள்ளம் மோவாபியருக்காக அழுகிறது;
அவர்களுடைய அகதிகள் சோவார் வரைக்கும்,
எக்லத் ஷெலிஷியாவரைக்கும் தப்பி ஓடுகிறார்கள்.
அவர்கள் லூகித் மலைச்சரிவுகளில்
அழுதுகொண்டே ஏறுகிறார்கள்.
ஒரொனாயீமின் வழியில் தங்கி
பட்டணத்தின் அழிவைப்பற்றிப் புலம்புகிறார்கள்.
நிம்ரீமின் நீர்நிலைகள் வற்றிப்போயின;
புல்லும் வாடிப்போயிற்று,
பசுமையும் இல்லாமல் போயிற்று.
பசுமையான எதுவுமே மீதியாய் விடப்படவில்லை.
ஆகவே அவர்கள் தேடிச் சேர்த்த செல்வத்தை,
அலறிகளின் ஆற்றுக்கு அப்பால் தூக்கிச் செல்கிறார்கள்.
அவர்களுடைய வேதனைக் குரல் மோவாப் எல்லையெங்கும் கேட்கிறது;
அவர்களுடைய அலறும் சத்தம் எக்லாயீம்வரை எட்டுகிறது.
அவர்களுடைய புலம்பல் பீர் ஏலீம் வரையும் கேட்கிறது.
தீமோன் பட்டணத்தின் நீர்நிலைகள் இரத்தத்தால் நிரம்பியிருக்கின்றன.
ஆனால் நான் தீமோனின்மேல் இன்னும் அதிக வேதனையைக் கொண்டுவருவேன்.
மோவாபிலுள்ள அகதிகள்மீதும்,
நாட்டில் மீதியாய் இருப்பவர்கள்மீதும் சிங்கத்தை ஏவிவிடுவேன்.