12
துதியின் கீதங்கள்
அந்த நாளிலே நீ:
“யெகோவாவே உம்மைத் துதிப்பேன்.
என்னில் கோபமாயிருந்தபோதிலும்,
உமது கோபம் தணிந்து
என்னைத் தேற்றியிருக்கிறீர்.
நிச்சயமாய் இறைவனே என் இரட்சிப்பு;
நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்.
யெகோவா, யெகோவாவே என் பெலன், என் பாடல்;
அவரே எனது இரட்சிப்பும் ஆகினார்” என்று சொல்வாய்.
நீ இரட்சிப்பின் கிணறுகளிலிருந்து
மகிழ்வுடன் தண்ணீரை மொண்டுகொள்ளுவாய்.
அந்த நாளிலே நீங்கள் சொல்வதாவது:
“யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய பெயரைப் போற்றுங்கள்;
அவருடைய செயல்களை நாடுகள் மத்தியில் தெரியப்படுத்துங்கள்,
அவருடைய பெயர் உயர்ந்ததென்று பிரசித்தப்படுத்துங்கள்.
யெகோவா மகிமையான காரியங்களைச் செய்தபடியால் அவரைப் போற்றிப்பாடுங்கள்;
உலகம் முழுவதற்கும் இது அறிவிக்கப்படட்டும்.
சீயோனின் மக்களே, ஆனந்த சத்தமிட்டு ஆர்ப்பரித்துப் பாடுங்கள்;
ஏனெனில் உங்கள் மத்தியில் இஸ்ரயேலின் பரிசுத்தர்
மேன்மையுள்ளவராய் விளங்குகிறார்.”