அத்தியாயம் 4
எலிப்பாஸின் வார்த்தைகள்
அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக:
நாங்கள் உம்முடன் பேசத்துணிந்தால், அனுமதிப்பீரோ?
ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்?
இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி,
சோர்ந்த கைகளைத் திடப்படுத்தினீர்.
விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கச்செய்தீர்,
தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.
இப்பொழுதோ துன்பம் உமக்கு சம்பவித்ததினால் சோர்ந்துபோகிறீர்;
அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும்,
உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாகவும் இருக்கவேண்டியதல்லவோ?
குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ?
சன்மார்க்கர் அழிக்கப்பட்டது எப்போது?
இதை நினைத்துப்பாரும். நான் கண்டிருக்கிறபடி,
அநியாயத்தை உழுது, தீமையை விதைத்தவர்கள்,
அதையே அறுக்கிறார்கள்.
தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து,
அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள்.
10 சிங்கத்தின் கெர்ச்சிப்பும், கொடிய சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்;
பாலசிங்கங்களின் பற்களும் உடைந்துபோகும்.
11 கிழச்சிங்கம் இரையில்லாமையால் இறந்துபோகும்,
பாலசிங்கங்கள் சிதறிப்போகும்.
12 இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாக அறிவிக்கப்பட்டது,
அதன் மெல்லிய ஓசை என் காதில் விழுந்தது.
13 மனிதர்மேல் அயர்ந்த தூக்கம் வரும்போது,
இரவு தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,
14 பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது,
என் எலும்புகளெல்லாம் நடுங்கியது.
15 அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு முன்பாகக் கடந்தது,
என் உடலின் முடிகள் சிலிர்த்தது.
16 அது ஒரு உருவம் போல என் கண்களுக்குமுன் நின்றது,
ஆனாலும் அதின் உருவம் இன்னதென்று விளங்கவில்லை;
அமைதலுண்டானது, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது:
17 மனிதன் தேவனைவிட நீதிமானாயிருப்பானோ?
மனிதன் தன்னை உண்டாக்கினவரைவிட சுத்தமாயிருப்பானோ?
18 கேளும், அவர் தம்முடைய வேலைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை;
தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே,
19 புழுதியில் அஸ்திபாரம் போட்டு,
மண் வீடுகளில் குடியிருந்து, செல்லுப்பூச்சியால்
அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?
20 காலைமுதல் மாலைவரைக்கும் அழிந்து,
கவனிப்பார் ஒருவருமில்லாமல்,
நிலையான அழிவை அடைகிறார்கள்.
21 அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ?
ஞானமடையாமல் இறக்கிறார்களே என்று சொன்னான்.