அத்தியாயம் 28
வெள்ளிக்கு விளையும் இடம் உண்டு,
பொன்னுக்குப் புடமிடும் இடமுமுண்டு.
இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்;
செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும்.
மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக்
கடைசிவரை ஆராய்ந்து தேடி,
இருளுக்கும் அங்கே முடிவுண்டாக்குகிறான்.
கடக்கமுடியாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும்,
உழைப்பாளியானவன் அதை மனிதரால் வற்றிப்போகவைத்துச் செல்லுகிறான்.
பூமியின்மேல் ஆகாரம் விளையும்;
அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ,
நெருப்பால் மாறினது போலிருக்கும்.
அதின் கற்களில் இந்திரநீலம் விளையும்;
அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும்.
ஒரு வழியுண்டு, அது ஒரு பறவைக்கும் தெரியாது;
கழுகின் கண்ணும் அதைக் கண்டதில்லை;
கொடிய மிருகங்களின் கால்கள் அதில் படவில்லை;
சிங்கம் அதைக் கடந்ததில்லை.
அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி,
மலைகளை வேருடன் புரட்டுகிறான்.
10 கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்;
அவனுடைய கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும்.
11 ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்;
மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்.
12 ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே?
புத்தி விளைகிற இடம் எது?
13 அதின் விலை மனிதனுக்குத் தெரியாது;
அது மக்கள் வாழ்கிற தேசத்திலே கிடைக்கிறதில்லை.
14 ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது;
சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.
15 அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும்,
அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் முடியாது.
16 ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும்,
இந்திரநீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
17 பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல;
பசும்பொன் ஆபரணங்களுக்கு அதை மாற்றமுடியாது.
18 பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்துடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது;
முத்துகளைவிட ஞானத்தின் விலை உயர்ந்தது.
19 எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல;
பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல.
20 இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்;
புத்தி தங்கும் இடம் எங்கே?
21 அது உயிருள்ள அனைவருடைய கண்களுக்கும் ஒளித்தும்,
ஆகாயத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது.
22 நாசமும்*, மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.
23 தேவனோ அதின் வழியை அறிவார்,
அது இருக்கும் இடம் அவருக்கே தெரியும்.
24 அவர் பூமியின் கடைசிமுனைகளைப் பார்த்து,
வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.
25 அவர் காற்றுக்கு அதின் எடையை நியமித்து,
தண்ணீருக்கு அதின் அளவைக் கணக்கிட்டு,
26 மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்துடன் கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.
27 அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்;
அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி,
28 மனிதனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்;
பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார்” என்று சொன்னான்.
* அத்தியாயம் 28:22 28:22அப்பொல்லியோன்